Sunday, June 27, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 2

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பி அவர்களுக்கு 'தமிழ் கணினி அறிஞர்' என்ற விருது' வழங்கப்பட்ட செய்தி, மற்றும் புகைப்படங்கள் முந்தைய பதிப்பில் பார்த்தோம். இதோ மேலும் புகைப்படங்கள்

அதிரை உமர்தம்பிக்கு விருது வழங்கப்படும் முன்பு உமர்தம்பி அவர்களின் தமிழ் இணைய சேவை பாராட்டி உமர்தம்பி அவர்களின் குடும்பத்தவர்களை கவுரவிக்கும் புகைப்பட காட்சிகள்.

மேலும் புதிய புகைப்படங்கள் நம் வலைப்பூவில்  விரைவில் வெளியிடப்படும், தொடர்ந்து இணைந்திருங்கள்.

புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.

Saturday, June 26, 2010

உமர்தம்பிக்கு விருது - புதிய புகைப்படங்கள் பகுதி - 1

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்குதமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.


உமர்தம்பி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த சிங்கப்பூர் தமிழ் சங்கத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
புகைப்படம் உதவி செய்த சகோதரர் கோவை சஞ்சய் காந்திக்கு நன்றி.

மேலும் புகைப்படங்கள் இன்னும் தெளிவாக பார்க்க அதிரைநிருபர் வலைப்பூவிற்கு சென்று பாருங்கள்.


உமர்தம்பிக்கு விருது வழங்கப்பட்டது

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் நடக்கும் தமிழ் இணைய மாநாட்டில் அதிரை உமர்தம்பிக்கு ‘தமிழ் இணைய அறிஞர்’ என்ற விருது இன்று மாலை 6:00 வழங்கப்பட்டது.
                                                                                                                      
சிங்கப்பூர் தமிழ் அறக்கட்டளை சார்பாக இவ்விருது வழங்கப்பட்டது, தமிழ் இணைய உலகில் பிரபல்யமான தமிழ் இணைய ஆர்வளர் திரு.பாலா பிள்ளை அவர்கள் விருதை வழங்கினார்கள், உமர்தம்பி அவர்களின் மூத்த சகோதரர். அப்துல் காதர் அவர்களும், உமர்தம்பி அவர்களின் மூத்த மகன் மொய்னுதீனும் விருதை பெற்றுக் கொண்டனர்.

உமர்தம்பி தம்பி அவர்களின் மகனும், சகோதரரும் துணை முதல்வர் மான்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்கள், உமர்தம்பி அவர்களின் தமிழ் சேவையை துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்கள், உமர்தம்பிக்கு அங்கீகாரம் தர தம்மிடம் நிறைய கோரிக்கைகள் வந்தாகவும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்கள் புகைப்படங்களுடன் விரைவில் வெளியிடப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.

Friday, June 25, 2010

உமர்தம்பி அரங்கம் - முதல் புகைப்படங்கள்

தேனீ எழுத்துரு தந்த அதிரை உமர்தம்பி அவர்களின் பெயரில் அரங்கம் தமிழ் இணைய மாநாட்டில் உள்ளது என்பது நாம் அறிந்த செய்தி, அவ்வரங்கத்தின் புகைப்படங்களை பாருங்கள். புகைப்படங்களை பார்த்ததும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?







தமிழ் நாட்டில் அதிரையில் பிறந்த உமர்தம்பியை 'துபாய் உமர்தம்பி' என்று பெயரிட்டிருப்பது முதலில் சிறிய வருத்தமாகத் தான் இருந்தது,  துபாயில் இருக்கும் காலத்தில் தான் உமர்தம்பி தமிழ் இணைய மக்களிடம் பிரபல்யமானார்,  உமர்தம்பி மரணித்த போது அவர் துபாயில் இருப்பதாகத் தான் அனேக தமிழ் இணையவாசிகள் எண்ணியிருந்தார்கள், தமிழ் இணைய ஆர்வளர்களிடம் துபாய் உமர்தம்பி என்று அறியப்பட்டதால் 'துபாய் உமர்தம்பி அரங்கள்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மாநாட்டு அமைப்பாளர்களிடமிருந்து விளக்கம் தரப்பட்டுள்ளது. உமர்தம்பி என்ற பெயர் தமிழ் இணையம் ஒரே ஒரு நபரை மட்டும் தான் ஞாபப்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Thursday, June 24, 2010

அதிரை உமர் தம்பி – நன்றி மடல்

தமிழ்கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவையை அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர் தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது உலகறிந்த செய்தியாகிவிட்ட போதிலும் இவ்விசையத்தில் இதற்காக உண்மையில் உழைத்த தன்னலமற்ற தனிப்பட்ட நபர்கள் முக்கியமாக கூறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள். உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது விசையத்தில் இறைவனுக்கு தெரியும் யார் உண்மையில் உழைத்து என்று.

அதிரை உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், துணை முதல்வர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.

இம்முயற்சியில் முழு முயற்சி எடுத்து முதல்வருக்கு கடிதம் எழுதி, துணை முதல்வர் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரையை சேர்ந்த அன்பு சகோதரி கவிஞர் மலிக்கா பாருக் அவர்களுக்கும், அவர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த சகோதரர். வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள். இவர்களின் முயற்சி தொடர்பான முழு விபரங்கள் சகோதரி மலிக்கா அவர்களின் நீரோடை வலைப்பூவில் விபரமாக பதிவாகி உள்ளது.

----------------------------------------------------
தற்போதைய செய்தி ‘துபாய் உமர்தம்பி அரங்கு’ என்ற பெயரை பார்த்ததும் எனக்கு சிறிய வருத்தம், உமர் தம்பி இந்திய குடிமகன், ஒரு தமிழர், இம்மண்ணில் பிறந்து இம்மண்ணில் மறைந்துள்ளார். ‘அதிரை உமர் தம்பி அரங்கு’ என்று போட்டிருக்கலாம், இல்லாவிட்டாலும் தேனீ எழுத்துரு தந்தவரை ‘தேனீ உமர் தம்பி அரங்கு’ என்றாவது போட்டிருக்கலாம்.  ‘சந்தோசத்திலும் துக்கம் இருக்கத்தான் செய்யும்’ என்ற நினைப்புடன் மனதை சமாதானம் செய்து தானே ஆக வேண்டியுள்ளது இக்காலத்தில்.

Monday, June 21, 2010

ஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி

Umar Thambi: Forgotten father of Tamil computing
Coimbatore: His creative work has been accepted globally. But, he failed to get due recognition locally even after his death. He is Umar Thambi, the pioneer, who contributed to Unicode by developing fonts for Tamil computing.

Bringing to light Umar's pioneering effort at a press briefing in Coimbatore, M H Jawahirullah, state president, Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) said that he had written a detailed letter to Chief Minister M Karunanidhi detailing the contributions made by Umar Thambi for the cause of Tamil computing.

Interestingly, Umar developed the Tamil fonts using Unicode for Tamil computing without any basic collegiate education.

It was Umar Thambi, who took the initiative to take Tamil worldwide through web format. Initially, Tamil remained as palmscripts and later in book form.

His Tamil fonts using Unicode system was well received by netizens across the globe.

Hailing from Adirampattinam in Thanjavur district, Umar was born on June 15, 1953 to Abdul Hameed and Rokkaiyya.

A bright student at Khader Moideen Higher Secondary School at his native place, Umar used to meddle with radio sets since he had a craze for electronics.

After his schooling, Umar left for Dubai in search of greener pastures. Even while working, he spared time to learn the basics of software and later started updating his knowledge on computer technology.

Back home in 2001, Umar devoted himself to software development.

Finally, Umar accomplished the mission of developing the fonts using Unicode for Tamil computing method.

Jawahirullah said that Umar Thambi had worked for the development of Tamil without any government assistance.

It would be a fitting tribute to honour Umar Thambi during the World Classical Tamil meet by instituting awards or education assistance to students pursuing their research in Tamil computing.

D Sekar Annadurai, a Tamil enthusiast and a regular Tamil internetuser, said that Umar's contribution to Tamil computing should not go unrecognised as he had paved the way for others, who are keen in improving Tamil computing taking cue from his initiatives.

Echoing similar views, several admirers from abroad through emails in Tamil internet magazines have appealed to the Tamil Nadu government to recognise Unicode Umar Thambi at the Tamil meet.

Sunday, June 20, 2010

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்

தமிழ் இணைய மாநாட்டு அரங்குகளுக்கு பெயர் சூட்டப்பட்ட தமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள் - சிறு குறிப்பு கீழே:

முரசொலி மாறன்

தமிழ் இணைய மாநாட்டை 1999ம் வருடம் நடத்த பெரு முயற்சி எடுத்துவர்களில் ஒருவர் அமரர் முரசொலி மாறன். இவ்வகையில் தமிழகத்தில் உத்தம நிறுவனத்தை மக்களிடைய பிரபலப்படுத்திய பெருமை இவரைச் சாரும். மின் வழி தமிழ் வளர மென்பொருள் பல தமிழர்களுக்காகத் தயார் செய்திட வழி வகுத்தவர் இவர். தமிழ்நாட்டில் நடந்த இணைய மாநாடுதான் ஒருங்குறி இல்லாத காலத்தில் தமிழ் எழுத்துருக்களைத் தரப்படுத்துவதற்கு வழிகோலியது எனலாம். ஆங்கிலம்-தமிழ் என்னும் இருமொழியில் அமைக்கப்பட்ட தாப் என்னும் எழுத்துருவும் தமிழில் மட்டுமே தட்டச்சு செய்யும் வகையில் அமைக்கப்பட்ட தாம் என்னும் எழுத்துருவும் அமைக்கு இம்மாநாட்டில்தான் வழிவகை செய்யப்பட்டது. அமரர் முரசொலி மாறன் தமிழர்களிடைய மென்பொருள்களின் தரப்படுத்தலுக்கான முயற்சியை வற்புறுத்தியவர். தமிழ் மென்பொருள் உற்பத்தியாளர்களிடைய பலப்பல மென்பொருள்களை உருவாக்க ஊக்குவித்தவர். தமிழகத்தில் மென்பொருள் உற்பத்தியளர்களுக்கு அரசு மூலமாக நிதியுதவிகள் பலவும் செய்து பல சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்க வழிகோலியவர்.
தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் அமரர் முரசொலி மாறன்
அவர்களின் தமிழ்க் கணினித் தொண்டை என்றென்றும் நினைவு கூறும்.

சுஜாதா

சுஜாதா எனும் புனைப்பெயரைக் கொண்ட ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அமரர் ரங்கராஜனை அறியாதோர் தமிழ் இலக்கிய உலகில் இருக்கமுடியாது. தமிழ் இலக்கிய உலகில் ஆணித்தரமான ஒரு இடத்தைப் பெற்ற சுஜாதா கணினி வழி தமிழைப் பயன்படுத்தும் ஒரு சிறந்த பயனாளராக விளங்கினார். இவரின் கணினி ஆர்வம் இவரை அதிக அளவில் தமிழ் நாவல்களை எழுதவைத்தது என்றால் மிகையாகாது. 1997ல் அமரர் நா. கோவிந்தசாமி ஏற்பாடு செய்த தமிழ் இணைய மாநாட்டில் பங்கு கொண்ட சுஜாதா தமிழ் இணைய வளர்ச்சியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களில் ஒருவராக ஆனார். தமிழகத்தில் இணைய மாநாடு நடக்கவேண்டும் என்னும் உறுதியோடு 1999ம் ஆண்டு தமிழகத்தில் இதை நடத்த வழிகோலினார். முரசு அஞ்சல் எனும் தமிழ்த் தட்டச்சு மென்பொருளை இடையறாது பயன்படுத்தி மற்ற எழுத்தாளர்களிடையே கணினி பயன்பாட்டைப் பற்றியும் தமிழில் கணினி பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கணினியின் அற்புதங்களை மையமாக வைத்துத் தமிழில் நிறைய கதைகளை எழுதி தமிழ் வாசகர்களை தமிழ்க் கணினிக்கு ஈர்த்தவர்! உத்தம நிறுவனத்தின் முன்னோடிகளில் பலரோடு இணைந்து பணியாற்றி உத்தமம் ஆரம்ப காலத்தில் வளர வழிவகுத்தவர் அமரர் ரங்கராஜன் அவர்கள். உத்தமம் எனும் நிறுவனம் வளர வேண்டும் என முனைந்து ஆரம்ப காலங்களில் உத்தமத்தின் குழுமத்தில் அடிக்கடி தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு உத்தம உறுப்பினர்களிடைய ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினார்.

நா. கோவிந்தசாமி

இணைய முன்னோடிகளில் ஒருவர் என பலராலும் அன்புடன் கூறப்படும் அமரர். நா. கோவிந்தசாமி சிங்கப்பூரில் தமிழாசிரயராகப் பணியாற்றியவர். தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழில் சிறுகதைகள் பல எழுதிய இவர் புலம்பெயர்ந்த தமிழ் இலக்கியவாதிகளின் வரிசையில் இடம்பிடித்தவர். 1946-ஆம் ஆண்டு பிறந்த கோவிந்தசாமி 'உள்ளொளியைத் தேடி', 'வேள்வியைதேடி'. ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல சிங்கப்பூரில் பிரபலமானவை. சிங்கை வானொலியில் அவர் எழுதிய அன்புக்கப்பால், அலைகள் ஓய்வதில்லை எனும் தொடர் நாடகங்கள் புகழ்பெற்றவை. இணையம் வளர்ந்த காலத்தில் தமிழுக்கு இணையத்தில் ஒரு சிறந்த இடம் வேண்டும் என்ற எண்ணத்துடன் டாக்டர் டான் டின் வீ, லியோங்க கோக் யொங் ஆகிய இரு சீனக் கணினி வல்லுனர்களோடு இணைந்து தமிழ்நெட் எனும் எழுத்துருவைப் படைத்தார். இந்த எழுத்துருவின் பிறப்பு சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல தமிழ் இணையப் பக்கங்கள் பிறக்க வழிகோலியது. ஐஈ விசைப்பலகை எனும் தமிழ்த்தட்டச்சு முறையை அமைத்து தமிழை எளிதாகக் கணினியில் தட்டச்சுச் செய்ய வழியமைத்தார். குறிப்பாக இவரின் முயற்சியில் 1997ம் ஆண்டு முதல் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடந்தது. பல தமிழ்க் கணினி வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இவ்வகையில் தமிழ் இணையமும் உத்தம நிறுவனமும் வளர வித்திட்டவர் நா. கோவிந்தசாமி! அண்ணாரின் இறுதிகாலத் தமிழ்க் கணினி முயற்சி தமிழ் இணையத்தின் முதற்கட்ட வளர்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. 1999-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மாரடைப்பால் இளம்
வயதில் காலமான நா. கோவிந்தசாமி உத்தமத்தனரின் மனதில் என்றென்றும்
நிலைத்திருப்பார்.

உமர் தம்பி June 15,1953 - July 12,2006

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. மின்னணுவியலாளரான இவர் தமிழில் ஒருங்குறி படியெடுத்த காலத்தில் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான 'தேனீ' இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார். ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு
எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும். தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு வலைத்தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் பெரும்பாலானோர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைத்தளம், வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் உலகம் ம‌ட‌ற்குழு, தமிழ் மணம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறிக் குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி அவர்கள் உருவாக்கிய செயலிகளும் கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன. எல்லா வகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி ஒருங்குறி மாற்றி, தேனீ ஒருங்குறி எழுத்துரு வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு வைகை இயங்கு எழுத்துரு என்பனவற்றோடு தமிழா-இ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.
இப்படியாக தமிழ் இணையத்தோடு இணைந்த உமர் தம்பி அவர் வடிவமைத்துத் தந்த தமிழ் மென்பொருள்கள் மூலம் தமிழ் இணையத்தில் மங்காப் புகழை எய்தியவர்!
யாழன் சண்முகலிங்கம்

அப்பு ஆர்ச்சி என அன்பாக அழைக்கப்பட்ட அமரர் யாழன் சண்முகலிங்கம் இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தமிழ் இலக்கியவாதி மற்றும் மென்பொருள் பொறியியலாளரான இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டு காலம் பணியாற்றி அமெரக்கப் பிரஜை உரிமை பெற்று அங்கிருந்தே தனது தமிழ்த் தொண்டை ஆற்றினார். இவருடைய மிக முக்கியமான தமிழ் மென்பொருள் யாழன் தமிழ்ச் சொற்பகுப்பியாகும். இம்மென்பொருளை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்றைந்தாம் ஆண்டிலேயே எழுதி அதை உலகலவில் தமிழர்களிடையே பிரபலப்படுத்தினார். இது தமிழ்வலை99 என்ற மென்பொருளுக்கு முன்னதாகவே எழுதப்பட்டது. இந்த வகையில் தமிழர்களிடையே தமிழைக் கணினியில் பயன்படுத்த முயற்சி செய்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். தமிழ் எழுத்துரு வளராத நாட்களில் தமிழைக் கணினியில் பயன்படுத்த போதுமான வசதி இல்லாத நாட்களில் இணைய வளர்ச்சி தொடக்க்க் காலத்தில் இருந்த நாட்களில் ஒரு எளிமையான பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரு மென்பொருளைச் செய்து அதை தமிழர்களின் மத்தியில் பிரபலப்படுத்தியது மிகச் சாதனை என்றுதான் கூறவேண்டும். யாழன் விசைப்பலகையை இவர் 1993ம் ஆண்டு உருவாக்கி அதை தமிழர்களுக்கு அர்ப்பணித்தது தமிழ் இணைய வளர்ச்சியின் முக்கியமான காலகட்டங்களில் ஒன்று எனலாம்.

நன்றி: உத்தமம்

Wednesday, June 16, 2010

உமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்

தேனீ உமர்தம்பி அவர்களின் பெயரில் விருது சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக சென்ற மாதம் விருது வழங்கப்பட்டது இது பற்றிய செய்தியை இங்கு மீண்டும் என் வலைப்பூவில் பதிவு செய்வவதில் பெருமையடைகிறேன்.


சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணையதளம் இணைந்து நடத்திய மணற்கேணி 2009 நிறைவு விழா இன்று(மே 28,2010) மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா ஆர்கெட் அருகில் உள்ள அப்பல்லோ பனானிலீஃப் உணவகத்தில் மாலை 6.00 மணியிலிருந்து கலைக்கட்டியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மணற்கேணி 2009 சிறந்த கட்டுரைகள் எழுதி வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு (திரு.தருமி, திரு.பிரபாகர் மற்றும் திரு.தேவன்மாயம்) விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகள் வலைப்பதிவில் செயல்பட்டும் இணையத் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருந்து தற்போது மறைந்துவிட்ட தேனி எழுத்துறு தந்த தேனி உமர் தம்பி, தேன்கூடு திரட்டி உருவாக்கி மாதம் தோறும் சிறுகதைகள் போட்டி நடத்தி தமிழ்பதிவர்களை ஊக்குவித்த திரு.தேன்கூடு சாகரன், கேன்சருடன் ஒரு யுத்தம் நடத்திக்கொண்டே தமிழ் வலையுலகில் கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் எழுதிய திருமதி.அனுராதா சுப்ரமணியன், தமிழ் கணிமை இணைய வளர்ச்சியில் பங்காற்றிய திரு.சிந்தாநதி அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.

இந்த மாபெரும் விழாவை திரு.மா.அன்பழகன்,திருமதி சித்ரா ரமேஷ், திருமதி ஜெயந்தி சங்கர்,  திரு விஜயபாஸ்கர், திரு.இராமகண்ணபிரான், திரு.பாண்டியன்,  திரு.கவி, கவிஞர் பாலுமணிமாறன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், வாசகர் வட்டம் உறுப்பினர்களும் கலந்துகொண்டு விழா சிறக்க துணையாக இருந்தார்கள். விழாவின் முடிவில் உணவும் வழங்கப்பட்டது.

நன்றி அம்மா அப்பா வலைப்பூ

தன்னலம் விரும்பாத தாய்தமிழ் தொண்டர் தேனீ உமர்தம்பி பெயரில் விருது வழங்கி சிறப்பித்த சிங்கப்பூர் வலைப்பதிவர்கள், தமிழ்வெளி திரட்டி இணையதளம் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உமர்தம்பி குடும்பத்தார், நண்பர்கள் அதிரைவாசிகளின் சார்பாக அன்பான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் தமிழ் சேவை இவ்வுலகம் இருக்கும் நாள் வரை தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
 
இச்செய்தியை மீண்டும் எனக்கு ஞாபகப்படுத்திய அன்பு சகோதரர் ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.

Tuesday, June 15, 2010

உமர்தம்பி - பிறந்ததினம் இன்று..

கணிணியில் தமிழைத் தடங்கின்றி தட்டச்சிட உதவும்வகையில் தேனீ எழுத்துருவை அனைவரும் பயன்படும் வகையில் உருவாக்கித் தந்தவரான தேனீ உமர்தம்பி பிறந்த தினம் இன்று (15-06-2010).

இச்செய்தியை இன்று காலை வெளியிட்ட சுவரொட்டி வலைப்பூவிற்கு மிக்க நன்றி

Sunday, June 13, 2010

உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்

தேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை   உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT  இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது

இந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.

உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்
செய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்
மிக்க நன்றி.

இத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி   மறவாத
உமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி
அவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.

உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக
அரசுக்கும், தமிழ முதல்வர் அவர்களுக்கும், துணை முதல்வர்கள் அவர்களுக்கும் மிக்க நன்றி.

இம்முயற்சியில் தனிப்பட்ட கவணம் செலுத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி, அரசின் கவணத்துக்கு எடுத்திச் சென்ற தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், தமுமுக சகோதரர்கள் அனைவருக்கும் எங்களின் அன்பான நன்றி.

இறுதியாக இம்முயற்சியில் முழு கவணம் செலுத்தி தமிழக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி,  துணை முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் கவணத்துக்கு எடுத்துச் சென்ற அதிரை கவிஞர் சகோதரி 'அன்புடன் மலிக்க' அவர்களுக்கும், அவரின் முயற்சிக்கு பெருதவி செய்த அன்பு சகோதரர் திரு. காஞ்சி முரளி அவர்களுக்கும், திருவாரூர் வழக்கறிஞர் திரு. அசன் முகமது ஜின்னா  அவர்களுக்கும்  எங்களின் அன்பான கோடான கோடி நன்றிகள்.

வரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.

தாஜூதீன்